
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதாவது 9 இடங்களில் இலக்குகள் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைக் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 70 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ரஜோரி மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜம்மு - காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வருகிறது.