சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்துப் பேசினார்.
வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியைத் திரட்டுவதில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். அண்மை காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வரும் அவர், டெல்லி சென்று உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவும் உடனிருந்தார்.
தேசிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.