tejasvi surya about trump twitter account suspension

Advertisment

அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து பெங்களூரு தொகுதியின் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று முன்தினம் (07/01/2021) கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு அமெரிக்கத் தலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் வன்முறை தொடர்பான வீடியோவை, சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் 12 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் வன்முறை தொடர்பான வீடியோவை ட்ரம்ப் வெளியிட வாய்ப்பு இருப்பதால் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, "ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள செய்கை, ஜனநாயக நாடுகளுக்கு இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படவுள்ள அச்சுறுத்தலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. அமெரிக்க அதிபருக்கு இது நடக்குமென்றால், நாளை இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால் மத்திய அரசு விரைவாக இத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைச் சீராய்வு செய்வது நமது ஜனநாயகத்துக்கு நல்லது" எனப் பதிவிட்டுள்ளார்.