ஆன்மீக மேடையில் மணப்பெண் கிடைக்கவில்லை என்று விரக்தியை வெளிப்படுத்திய ஆசிரியர் ஒருவர், 25 நாட்களுக்கு மேலாக காணாமல் போயிருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்வார் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான இந்திரகுமார் திவாரி. பகுதிநேர ஆசிரியராகவும், விவசாயியாகவும் பணியாற்றி வரும் இந்திரகுமாருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதனால் அவர் மன விரக்தியில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த மே மாதம் சிஹோராவுக்கு அருகில் உள்ள ரிவன்ஜா கிராமத்தில் புகழ்பெற்ற குரு அனிருத்தாச்சாரியா மகாராஜின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. 

அந்த நிகழ்ச்சிக்கு இந்திரகுமாரும் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் போது, தனக்கு மணப்பெண் கிடைக்காதது குறித்து தனது விரக்தியை இந்திரகுமார் வெளிப்படுத்தியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து, ஜூன் 6ஆம் தேதிக்குள் திரும்பி வருவதாக தனது அண்டை வீட்டாரிடம் தெரிவித்து ஜூன் 2ஆம் தேதி இந்திரகுமார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், ஜூன் 6ஆம் தேதிக்கு பிறகு இந்திரகுமார் வீடு திரும்பவில்லை. அவரிடம் இருந்து எந்த தொடர்பும் வராததால், கவலையடைந்த கிராமத்தினர் மஜ்ஹெளலி காவல்நிலையத்தில் இந்திரகுமார் காணாமல் போய்விட்டதாக ஜூன் 8ஆம் தேதி புகார் அளித்தனர். 

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண் கிடைக்காதது குறித்து விரக்தியை வெளிப்படுத்தியது தொடர்பான வீடியோ வைரலான சிறிது நேரத்திலேயே அடையாளம் தெரியாத ஒரு குழு, இந்திரகுமாரை தொடர்பு கொண்டுள்ளது. குஷி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அவரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூருக்கு இந்திரகுமாரை அந்த கும்பல் அழைத்துள்ளனர். திருமண சடங்குகளின் ஒரு பகுதியாக நகைகள் மற்றும் பணத்தைக் கொண்டு வருமாறு அவரிடம் அந்த கும்பல் கூறியதாகக் கூறப்படுகிறது. அதனை நம்பி இந்திரகுமார், உத்தரப் பிரதேசத்திற்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Advertisment

வீட்டை விட்டு வெளியேறிய இந்திரகுமாரை, 25 நாட்களுக்கு மேல் ஆகியும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். காணமல் போன இந்திரகுமாருக்கு, குடும்ப உறுப்பினர்களோ, நெருங்கிய உறவினர்களோ யாரும் இல்லாததால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திகைத்துப் போயுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள காவல்துறையை அணுகி அனைத்து தடயங்களையும் சேகரித்து இந்திரகுமாரை மத்தியப் பிரதேச போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்திரகுமாரை கண்டுபிடிக்கும் பணி போலீசாருக்கு சவாலாக இருப்பதால், கிராம மக்கள் காவல்துறையினருக்கு விசாரணையில் ஆதரவளித்து வருகின்றனர்.