கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், வெள்ளச்சரிவினாலும் 167 பேர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மிடுப்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நிறைய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு கேரள மாநில அரசு கோரிக்கையை விடுத்துள்ளது. பொதுமக்களும் உதவிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவதற்காக, அந்த மாநில அரசு மதுவின் மேல் உள்ள வரியை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில நிதி அமைச்சர் தோமாஸ் ஐசக் ட்விட்டரில்," வெள்ளப்பாதிப்பால் அதிக நிதி தேவைப்படுகிறது. அதனால் அடுத்த 100 நாட்களுக்கு மதுபானங்கள் மீதான கலால் வரியை 0.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.230 கோடி கூடுதலாக கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்