Skip to main content

தலைமை செயலகத்தில் தண்ணீர் பஞ்சம்...அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் முடிவடைந்த நிலையிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில் பெரிய ஐடி நிறுவனங்கள் முதல் கார் தயாரிக்கும் தொழிற்சாலை வரை தண்ணீர் தட்டுப்பாடு விட்டு வைக்கவில்லை. இதனால் ஊழியர்கள், நிறுவனங்களின் முதலாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது. இது போக சென்னையில் உள்ள உணவகங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள், பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

TN WATER PROBLEM

 

 

அதே போல் சென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூபாய் 3 மட்டும், ரூபாய் 5 என விற்கப்படுகிறது. இருப்பினும் இந்த தண்ணீரும் கிடைக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் தண்ணீர் எங்கு கிடைக்கும் என தேடி சென்று எடுத்து வருவதால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அலுவலகங்களில் சுமார் 7000 அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

TN WATER PROBLEM

 

 

 

இங்கு அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் வந்து செல்வதால் கழிவறை மற்றும் குடிநீருக்கு தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னை தலைமைச் செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு தீர்வு காண தலைமைச்செயலக வளாகத்தில் 6 இடங்களில் ஆழ்துளைக் குழாய்கள் அமைத்துள்ளனர் தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கத்தினர். இதனால் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகம் மட்டுமின்றி சென்னையில் பல அரசு அலுவலகங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.