Skip to main content

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ்மொழி நீக்கம்? பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

Prakash

 

 

 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் சி.டி.இ.டி. நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மொழிப்பாடத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 16 மொழிகளை நீக்கிவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என்ற அறிவிப்பு வெளியானது. 
 

இதனால், தமிழ் உள்ளிட்ட மொழிகளால் தேர்வெழுதலாம் என்று நினைத்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த தேர்வர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிராந்திய மொழிகளை நீக்கிவிட்டு இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘நான்கு மாதங்களில் தேர்வு நடக்கவிருப்பதால் மூன்று மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் தேர்வெழுத அனுமதிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தி மொழி பற்றிய கேள்வி; கோபமாய் பதிலளித்த விஜய் சேதுபதி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vijay sethupathy about hindi imposition

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

அப்போது விஜய் சேதுபதியிடம், ‘75 வருடமாக இங்கு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா..’ என்ற கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “இது மாதிரியான கேள்வியை அமீர்கான் வந்தபோதும் கேட்டீர்கள். எல்லா சமயத்திலும் கேட்கிறீர்கள். எதற்கு அந்த கேள்வி. என்னை போன்ற ஆட்களிடம் இந்த கேள்வி கேட்டு என்னவாகப் போகுது. இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு. கேள்வியே தப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை யாரும் இங்க தடுக்கவில்லை. எல்லாரும் படித்துக்கொண்டு தான் வருகிறார்கள். அதற்கான விளக்கம் பி.டி.ஆர் ஒரு இடத்தில் கொடுத்திருப்பார். அதை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்” என சற்று கோபமாகச் சொன்னார்.

Next Story

'கோவாவில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்' - தமிழக முதல்வர் கண்டனம்

Published on 14/12/2023 | Edited on 26/12/2023
 'Hindi is the official language and not the national language'; Chief minister condemns player for insulting Tamil woman

கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவரால் மிரட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளார்.  

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவர். 'நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், ’தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று உரத்தக் குரலில் கூறி பாடம் எடுக்கும் வகையில் தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.

மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழி அல்ல. பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சி தன்மையை வலியுறுத்தும் வகையில் தான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.