Tamil Nadu fishermen arrested; Annamalai letter to central government!

இலங்கை கடற்படையினர் கைது செய்த 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 16 மீனவர்களும் நெடுந்தீவு அருகே 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியஇலங்கை கடற்படையினர், மீனவர்களை காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை தலையிட்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது! மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!” எனக் கூறியுள்ளார்.