டெல்லியில் தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்துகொண்டு கரோனா பாதிப்புக்கு உள்ளாகிக் குணமடைந்த 300 பேர் கரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
கடந்த மாதத் தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தோனேசியா, தாய்லாந்து, உட்பட உலகின் பல இடங்களிலிருந்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் வந்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கரோனா பாதிப்புக்கு உள்ளாகிக் குணமடைந்த 300 பேர் கரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
இதற்காகக் குணமடைந்த கரோனா நோயாளிகள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வரவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்துகொண்ட 300 பேர் உட்பட சுமார் ஆயிரம் பேர் இந்த பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். ஒருவர் வழங்கும் பிளாஸ்மாவை வைத்து மூன்று பேரின் உயிரைக் காக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.