Skip to main content

“வேண்டாம்...”- முதல் நாளே பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் கோபி!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
nn

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கேரளா நடிகர் சுரேஷ் கோபிக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. கேரளாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேரள நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதனால் கேரளாவில் பாஜக தனது முதல் கணக்கை துவங்கி இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இணை அமைச்சராக சுரேஷ் கோபி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மலையாள தனியார் சேனலுக்கு சுரேஷ் கோபி கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், 'சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். மத்திய அமைச்சர் பதவியிலிருந்து என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன். அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன். ஆனால் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் பொறுப்பேற்றுக் கொண்டேன்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்