Supreme Court slams police for refusing case and asking people to leave

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மே 2021ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், அங்கு வன்முறை வெடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல பா.ஜ.கவினர் இந்த வன்முறையில் தாக்கப்பட்டனர்.

இந்த வன்முறையின் ஒரு பகுதியாக 40-50 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், பா.ஜ.க ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் புகுந்து நாசமாக்கினர். மேலும், அவரது மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக ஆடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்னால் 6 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அங்குள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்ய மறுத்தது மட்டுமல்லாமல், அவர்களை கிராமத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

Advertisment

அதன் பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, ஜாமீன் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பது உண்மைதான். இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதைத் தடுக்கவும் அவர்களால் முடிந்தது. ஆகஸ்ட் 2021 இல் இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

இது ஒரு கடுமையான சூழ்நிலை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர் அரசியல் கட்சி உறுப்பினர்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை இது எங்களுக்கு உணர்த்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒரே நோக்கம் பழிவாங்குதலாக மட்டுமே இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் இருக்க அனுமதிக்கப்பட்டால், வழக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையைக் காண முடியாது’ என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

வழக்குப்பதிவு செய்ய மறுத்த மேற்கு வங்க காவல்துறையை கடுமையாக சாடிய நீதிபதிகள், ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறை மீது வைத்திருக்கும் செல்வாக்கால், புகார்தாரருக்கு அச்சம் ஏற்படுகிறது. புகார்தாரருக்கும், மற்ற அனைத்து சாட்சிகளுக்கும் சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதை வங்காள உள்துறை செயலாளரும் காவல்துறை இயக்குநர் ஜெனரலும் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் எந்த பயமும் இல்லாமல் விசாரணையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட உத்தரவை மீறினால், மேல்முறையீட்டாளர் சிபிஐ அல்லது இந்த நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்’ என்று கூறினர்.