Skip to main content

"இது தேசிய நெருக்கடி நிலை; என்ன நடக்கிறது என்று பாருங்கள்" - உச்சநீதிமன்றம் காட்டம்...

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

supreme court

 

உச்சநீதிமன்றம் இந்தியாவில் கரோனா பரவல் கையாளப்படுவது குறித்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும், அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து சரியான விகிதங்களில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளது. 

 

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், "ஒரு தேசிய நெருக்கடியில், மத்திய அரசு முழு நாட்டிற்கும் தடுப்பூசிகளை வாங்க வேண்டும். மாநிலங்கள் இதில் பின்தங்கிய நிலையில் உள்ளன. உலகளவில் பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் உங்களுக்குத் தடுப்பூசிகளை வாங்குவோம் என்று நீங்கள் அவர்களிடம் கூற வேண்டும். இதனால் ஒரு தெளிவு கிடைக்கும். மொத்தமாக வாங்குவதால் குறைந்த விலையில் தடுப்பூசிகள் கிடைக்கிறது என மத்திய அரசு கூறுகிறது. இதுதான் காரணமென்றால், மாநிலங்கள் ஏன் அதிக விலை தர வேண்டும். நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு ஒரே விலை இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளது. 

 

தொடர்ந்து, "45 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு, நாங்கள் தடுப்பூசி வழங்குவோம். ஆனால் 45 வயதிற்கும் குறைந்தவர்களுக்கு மாநிலங்களே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் என மத்திய அரசு கூறுவதன் காரணம் என்ன" எனக் கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம், "இதற்கான உங்களின் காரணம் 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இறப்பு சதவீதம் அதிகமாக இருந்தது என்பதே. ஆனால் இரண்டாவது அலையில் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. 45 வயதுக்குக் குறைவானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது. மேலும், இணை நோயுள்ள 18 முதல் 45 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி வழங்குவது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

 

இதனைத்தொடர்ந்து, கோவின் செயலியில் பதிவு செய்து தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வது குறித்து கேள்விகளை எழுப்பிய போது.  "உங்கள் காதை நீங்கள் களத்தில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். ராஜஸ்தானில் பணிபுரியும் ஜார்க்கண்டை சேர்ந்த ஏழை விவசாயத் தொழிலாளி, தடுப்பூசிக்காகப் பதிவு செய்ய ஜார்க்கண்ட் செல்லவேண்டியுள்ளது. இணையச் சேவை இல்லாதவர்கள் அல்லது அதைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் கோவின் செயலியில் எவ்வாறு பதிவு செய்வார்கள்..? புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி  செலுத்தப்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள்?" என்றும் கேள்வியெழுப்பியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

‘உங்க ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’-வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
What is your governor doing?- The Supreme Court asked

பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

What is your governor doing?- The Supreme Court asked

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.