![The Supreme Court ordered the Election Commission officer to appear](http://image.nakkheeran.in/cdn/farfuture/61oSBkUN-WItT3A6nbAs41DDD6_63riJbiQLwuGh6Tg/1713937833/sites/default/files/inline-images/sc-art-new_0.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.
இத்தகைய சூழலில் விவிபேட் தொடர்பான இந்த வழக்கில் இன்று (24.04.2024) உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இன்று காலை இந்த இடைக்கால் உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அதாவது ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன.
தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா. அல்லது விவிபேட்டில் உள்ளதா. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா. விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா. மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
![The Supreme Court ordered the Election Commission officer to appear](http://image.nakkheeran.in/cdn/farfuture/dNRi3ZdmZ7C1OxOpzrbpKHb1rS93rCDH1wNt2brNgh8/1713937862/sites/default/files/inline-images/judgement--art-file_21.jpg)
மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.