Skip to main content

ராமர் பாலம் விவகாரம்... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. 30 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சுண்ணாம்பு பாறைகளால் ஆன பாலம் போன்ற அமைப்பை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

supreme court order on rama sethu

 

 

இந்துக்களின் அடையாளமாகவும், நம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் ஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. எனினும், அதன்பின் வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்ததால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று முறையிட்டார். இதனையடுத்து இந்த விவாகரத்தில் மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ராமரை பின்பற்றவில்லை” - சுப்ரமணியன் சுவாமி

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
 Prime Minister Modi does not follow god Ram says Subramanian Swamy

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்தம் 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.  

தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணல் கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் துளி அளவு கூட இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமாக, பொதுவாக இரும்பின் ஆயுட்காலம் 90 ஆண்டுகள் மட்டுமே; ஆனால் ராமர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கவும் எந்த வித இயற்கை பேரிடர்களிலும் பாதிப்பு ஏற்படாதவாறு உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கட்டுமானத்தில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறகிறது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சீரஞ்சிவி, கத்ரீனா கைஃப் என இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் எனப் பலரும் தங்களது குடும்பத்தினருடன் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றுள்ளனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு கோவில் கருவறையில் அவரது முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகம் பகவத்தும் கலந்துகொண்டார். அதன்பிறகு சிறப்பு பூஜைகளுடன் தற்போது குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனிடையே பாஜக மூத்த நிர்வாகி சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பிரதமர் அந்தஸ்து பூஜ்ஜியமாக இருக்கும் போது மோடி பிரதிஷ்டை பூஜையில் ஈடுபடுகிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பகவான் ராமரை பின்பற்றவில்லை. ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராகவும் நடந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ராமர் கோவில்; சுப்ரமணியன் சுவாமியின் கருத்தால் அப்செட்டான பாஜக

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Subramanian Swamy has said that Modi's contribution in the construction of Ram temple is zero

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்திரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது. 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி, கோவில் கருவறையில் வைக்கப்பட உள்ள ராமர் சிலையை எடுத்து வந்து வழங்கவுள்ளதாகவும், அதன்பின்பு அந்த சிலைக்கு பூஜை செய்து கருவறையில் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், பிரதமர் மோடி சிலையைத் தொட்டு எடுத்து வருவதால் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில்தான், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதில் பிரதமர் மோடியின் பங்களிப்பு பூஜ்ஜியம் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டியவரே தான் என்று கூறி வருகிறார். கோவில் கட்டியதில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியம்தான். அதற்குப் பதிலாக மோடி தனது வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும், அங்கு ஞான வாபி ஜோதிர்லிங் காசி கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் ராமர் கோவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலரும் கூறிவரும் நிலையில், ராமர் கோவில் கட்டியதற்கும், பிரதமர் மோடிக்கும் தொடர்பு இல்லை என்ற வகையில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்து பாஜகவினர் மத்தியில் கலக்கத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதாம்.