உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் உயர்நீதிமன்ற நூலக அரங்கில் கடந்த 8ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சட்டம் மற்றும் உயர்நீதிமன்ற பிரிவு சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் யாதவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இது ஹிந்துஸ்தான் நாடு, ஹிந்துஸ்தானில் வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இதுதான் சட்டம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து இதைச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் சொல்ல முடியாது. சட்டம், உண்மையில், பெரும்பான்மைக்கு ஏற்ப செயல்படுகிறது.
ஒரு சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சகிப்புத்தன்மையும் கருணையும் கற்பிக்கப்படும். அதே வேளையில், மற்றொரு சமூகத்தில், குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே விலங்குகளை அறுப்பது சொல்லித்தரப்படுகிறது. சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களில் தெய்வத்தின் அந்தஸ்து பெற்ற ஒரு பெண்ணை அவமதிக்க முடியாது. நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு, ஹலாலா கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு, மூன்று முறை தலாக் சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு, மனைவிகளுக்கு பராமரிப்பு கொடுக்காமல் இருக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் கூற முடியாது. நாட்டிற்கு ஆபத்தானவர்கள் என்பதால் நாடு அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள், நாடு முன்னேறுவதை விரும்பாத மக்கள். நாம் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாடு கண்டிப்பாக பொது சிவில் சட்டத்தை இயற்றும் என்று நான் சபதம் செய்கிறேன். அது மிக விரைவில் நடக்கும்” என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் யாதவ் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நீதித்துறை பொறுப்புடைமை மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரம் என்ற தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் எழுதியது. இந்த விவகாரத்தைக் கவனத்திற்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றம், நீதிபதி சேகர்குமார் யாதவ் பேச்சு தொடர்பான விவரங்களை அலகாபாத் நீதிமன்றம் அறிக்கையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.