தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது திருமணத்தைக் கலைக்கக் கோரி தெலுங்கானா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து, அவரது மனைவி, அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகத்தெலுங்கானா நீதிமன்றத்தில் வன்கொடுமை வழக்கு ஒன்றைத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறியதாவது, ‘இதுபோன்ற வழக்குகளில் ஆதாரங்களை வழங்காமல் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுவது என்பது குற்றவியல் வழக்குக்கு அடிப்படையாக அமையாது. ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்படும் கொடுமையைத்தடுக்க சட்டப்பிரிவு 498(ஏ) என்பது அறிமுகமானது.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் திருமண தகராறுகள் அதிகரித்து வருகிறது. அதே சமயம், திருமண உறவுக்குள் ஏற்படும் முரண்பாடுகளால், தனிப்பட்ட வெறுப்பைக் கருத்தில் கொண்டு கணவன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. இது போன்ற வழக்குகளில் தெளிவில்லாத பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே இருக்கின்றன. சில சமயம், மனைவியின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்பதற்காக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகச் சட்டப்பிரிவு 498(ஏ) பயன்படுத்தப்படுகிறது.
அதனால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டாம் என இந்த நீதிமன்றம் எச்சரிக்கிறது. இந்த வழக்கை நிராகரிக்காததற்காகத்தெலுங்கானா நீதிமன்றம் தவறு செய்துவிட்டது” என்று கூறி இந்த வழக்கைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.