Supreme Court adjourned Senthil Balaji petition on ED request

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

Supreme Court adjourned Senthil Balaji petition on ED request

Advertisment

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரியும், செந்தில் பாலாஜி மீதான வழக்கை முதன்மை நீதிமன்றம் 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மனு மீண்டும் இன்று (15.05.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதாவது செந்தில் பாலாஜி தரப்பில், “வழக்கை காலதாமதப்படுத்தவே அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்கிறது. கடந்த 330 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் தர வேண்டும்” கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணையை நாளைய (16.05.2024) தினத்திற்கு ஒத்திவைத்துள்ளது.