Skip to main content

கர்நாடக முதல்வரின் ஆலோசகராக சுனில் நியமனம்!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Sunil appointed as Karnataka Chief Minister siddaramaiah advisor

 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு. அவருக்கு  கேபினட் அந்தஸ்து வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக 2016 முதல் 2019  வரை பணியாற்றியவர் சுனில். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவரை அப்பணியிலிருந்து விடுவித்து, அவருக்கு மாற்றாக பிரசாந்த் கிஷோரை நியமித்துக் கொண்டது திமுக தலைமை. 

 

திமுகவிடமிருந்து விலகிய சுனில், அதிமுகவுக்காக பணி புரிய விரும்பி எடப்பாடி பழனிச்சாமியிடம் முயற்சித்தார். ஆனால், அதிமுக பெருந்தலைகள் ஏற்க மறுத்ததால் , சுனிலின் முயற்சி பலிக்கவில்லை. இதனை அடுத்து காங்கிரசின் அகில இந்திய தலைமையிடம் முயற்சித்தார் சுனில். குறிப்பாக ராகுல்காந்தியிடம் நெருங்கினார். பல்வேறு கோணங்களில் நிறைய ஆலோசனைகள் நடந்தன. ஒரு கட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் சுனில் சேர்ந்தார். அவருக்கு தேர்தல் வியூக நிபுணர் என்ற பதவி கொடுக்கப்பட்டதுடன்,  தேர்தல் ஆலோசனை குழுவிலும் இணைத்துக் கொள்ளப்பட்டார். 

 

இந்த நிலையில்தான், கர்நாடக சட்டமன்ற தேர்தலை கவனித்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.  இந்த சூழலில், தற்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆலோசகராக சுனில் கனுகோலுவை நியமித்துள்ளது காங்கிரஸ் தலைமை.  இது குறித்து வெளியிடப்பட்ட அரசு உத்தரவில், “பெங்களூருவில் உள்ள ஜேபி நகரைச் சேர்ந்த ஸ்ரீ சுனில் கனுகோலு, முதல்வரின் ஆலோசகராக உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பதவியில் தொடர்வார். அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், கேபினட் அமைச்சர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.