
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (30.12.2024) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. அதன்படி ஸ்பேடெக்ஸ்- ஏ மற்றும் பி என 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.
இவ்வாறு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் பணிக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. மேலும், நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பவும் இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறும்போது, “ஸ்பேடெக்ஸ் (SpaDeX) பணிக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். மேலும், ஸ்பேடெக்ஸ் குழு இரண்டு சிறிய செயற்கைக்கோள் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.