கடும் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவுமே கைகொடுக்காத நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு அறிவித்தது.
ஏர் இந்தியாவை நடத்த பலரும் ஆர்வமாக இருப்பதால், அதில் யாருக்காவது ஒருவருக்கு ஏர் இந்தியா விற்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அண்மையில் தெரிவித்தார். ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள சூழலில், அதனை வாங்கும் நிறுவனம் ஏர் இந்தியாவின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முழுமையாக தன்வசப்படுத்தும்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் ஸ்வாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இது தேச விரோத செயல், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நான் நீதிமன்றத்திற்கு செல்வேன் என கூறியுள்ளார்.