Skip to main content

"இந்த முடிவு இளைஞர்களின் தற்கொலைகளுக்கு வழிவகுக்கும்" - பிரதமருக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம்..

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

subramanian swamy letter to modi regarding neet

 

நீட், ஜே.இ.இ தேர்வுகளை தற்போதைய நிலையில் நடத்துவது ஏராளமான இளைஞர்களைத் தற்கொலை முடிவுக்குத் தள்ளும் என சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கல்வி நிலையங்களின் தொடர் முடக்கம், தேர்வு மையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள், தேர்வு நேரத்திலான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்துப் பல தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.

 

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் கரோனா தீவிரமாக இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடிக்குச் சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ள கடிதத்தில், "தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை இப்போதே நடத்துவது, நாடு முழுவதும் இளைஞர்களின் ஏராளமான தற்கொலைகளுக்கு வழிவகுக்கும். மும்பை போன்ற பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் மாணவர்கள் 20-30 கி.மீ தூரத்தில் உள்ள பிற பகுதிகளிலிருந்து எவ்வாறு வருவார்கள். இந்தத் தேர்வு மாணவர்களைப் பொருத்தவரை அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு விஷயமாக இருப்பதால் மாணவர்கள் அதிகமான அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் முழுமையாகத் தயாராகும் போதுதான் அவர்களால் இந்தத் தேர்வை எழுத முடியும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்