
ஜிம்மிற்கு முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது எனக் காவல் துணை ஆய்வாளர் ஒருவர், உடற்பயற்சி கூட உரிமையாளருக்கு உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலின் அயோத்தி நகர் பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கூடத்தில் முஸ்லிம் பயிற்சியாளர்கள் சிலர் பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. உடற்பயிற்சி கூடத்தில் முஸ்லிம் பயிற்சியாளர்கள் இருப்பதற்கு இந்துத்துவா அமைப்புகளின் உறுப்பினர்கள் சிலர் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைமையை சரிசெய்ய காவல் துணை ஆய்வாளர் தினேஷ் சர்மா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதன் பின்னர், உடற்பயிற்சி உரிமையாளரிடம் முஸ்லிம் பயிற்சியாளர்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு வரக்கூடாது என்று தினேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளார். அதில், ‘முஸ்லிம்கள் பயிற்சி கொடுக்கவோ அல்லது பயிற்சி பெறவோ இங்கு வரக்கூடாது’ என்று தினேஷ் சர்மா கூறுவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல் துணை ஆய்வாளர் தினேஷ் சர்மா மீது காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் களப்பணியில் இருந்து நீக்கப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போபாலைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி கூறியதாவது, ‘பெண் வாடிக்கையாளர்களுக்கு பெண் பயிற்சியாளர்கள் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும். நகரத்தில் உள்ள ஜிம் பயிற்சியாளர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும், அவர்கள் சட்டத்தின்படி செயல்படுவார்கள்’ எனத் தெரிவித்தார்.