ஆசிரியர் அடித்ததால் மாணவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கிருஷ்ணாநந்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுமந்த தாஸ் என்ற மாணவன், அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல் கடந்த 7 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் சுமந்த தாஸ், சக மாணவனின் சைக்கிளை அனுமதியின்றி எடுத்து ஓட்டியுள்ளார். அதனால் இந்தி பாடப்பிரிவு ஆசிரியர் மாணவனைக்கண்டித்ததோடு, அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து வீட்டிற்குச் சென்ற மாணவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவன் சுமந்த தாஸுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே போலீஸில் மாணவரின் தந்தை, “எனது மகனை ஆசிரியர் அடித்துள்ளார்; பின் வீட்டிற்கு வந்த அவனுக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனே அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் உயிரிழந்துவிட்டான்” எனப் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியர் அடித்ததால் தான் மாணவனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளோம்; அது குறித்த அறிக்கை வந்த பிறகே மாணவர் எப்படி இறந்தார் என்று தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.