Skip to main content

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை... 8 விவசாயிகள் உயிரிழப்பு!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

struggle against agricultural law ...

 

மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 8  விவசாயிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

 

இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வரும் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ராவின் மகன் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி மத்திய இணை அமைச்சர் மகனின் காரை முற்றுகையிட முயன்றுள்ளனர். அப்பொழுது அமைச்சரின் மகன் வந்த வாகனம் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் முதற்கட்டமாக இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது இந்த விபத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

 

'சம்யுக்தா கிஷான் மோர்ச்சா' என்ற அமைப்பு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில், ஆத்திரத்தில் மத்திய இணை அமைச்சர் மகனின் காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் அசாதாரண சூழல் நிலவ, பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

struggle against agricultural law ...

 

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு நடந்த இந்த வன்முறை நிகழ்வு குறித்த தகவல்கள் வெளியான நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூர் பகுதிக்குக் காங்கிரஸின் பிரியங்கா காந்தி நாளை செல்லியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு விவசாயி இறந்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கவும், அவரது மகனைக் கைது செய்யவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இணை அமைச்சர் மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து அமைச்சர் அஜய் மிஸ்ரா கொடுத்துள்ள விளக்கத்தில், வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூரில் தனது மகன் இல்லை. அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாஜகவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்துவரும் நிலையில், ''லக்கிம்பூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. இது கண்டனத்திற்குரியது'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்