கார்த்திகை மாதம் விரதமிருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசனம் செய்ய ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பெருவழி, சிறுவழி என்ற இரண்டு பாதைகளைப் பயன்படுத்துவார்கள். பெரும்பாலானவர்கள் சிறு வழிப்பாதையைத் தான் பயன்படுத்துவார்கள். சில பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்த பல நாட்கள் தொடர் பயணம் மேற்கொண்டு சபரி மலைக்குச் செல்லுவார்கள். இவர்கள் பல நூறு கிலோ மீட்டர் நடந்தே பயணிப்பார்கள்.
இந்நிலையில் இந்தாண்டிற்கான சபரிமலை சீசன் துவங்கிவிட்ட நிலையில் ஆந்திர மாநிலம் திருமலையிலிருந்து 13 பக்தர்கள் மாலை அணிவித்து நடைப்பயணமாகச் சபரிமலைக்குப் புறப்பட்டனர். இவர்கள் திருமலையிலிருந்து நடந்தே சபரிமலைக்குச் செல்ல முடிவு செய்தனர். இந்நிலையில் அவர்கள் சபரி யாத்திரையைத் துவக்கிய சில மணி நேரங்களில் ஒரு நாய் ஒன்று இந்த பக்தர்களுடன் சேர்ந்து நடந்து வரத்துவங்கியது. சிறிது தூரம் நடந்து வரும் பின்னர் கலைப்பு ஏற்பட்டதும் நின்றுவிடும் என நினைத்தார்கள். ஆனால் இந்த பக்தர்கள் தான் இளைப்பாற ஆங்காங்கே நின்றார்களே தவிர அந்த நாய் அவர்களுடன் பயணித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.