A strange ritual of letting cows walk on people in madhya pradesh

தீபாவளி பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தை தொடங்கி விடுவர். ஆங்காங்கே, பட்டாசு ஒலிகளும் தீபாவளிக்கு முன்பே கேட்கும். குறிப்பாக, வடமாநிலங்களில், தீபாவளி பண்டிகையை பல நாட்களுக்கும் விமரிசையாக கொண்டாடி வருவார்கள். இந்த பண்டிகையை முன்னிட்டு விரதம் இருந்து இறைவழிபாடு செய்து கொண்டாடி வருவார்கள். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமம், தீபாவளியை பண்டிகையையொட்டி, வினோத சடங்கு ஒன்றை கடைபிடித்து வருவது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் பிதத்வாத் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள், தீபாவளிக்கு மறுநாள் பாரம்பரிய நடைமுறை ஒன்றை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தெருவில் வரிசையாக படுத்துக்கொண்ட பின், அவர்கள் மீது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை நடக்க செய்வார்கள். கோவர்த்தன பூஜை என்ற பெயரில் கடைபிடித்து வரும் இந்த நடைமுறையில் கிராமத்தின் ஆண்கள் கலந்து கொள்கின்றனர். தங்கள் மீது பசு மாடுகள் நடந்து சென்ற பின், அதை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.