Spacecraft Docking Event Postponed ISRO Announcement

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி - 60 ராக்கெட் கடந்த 30ஆம் தேதி (30.12.2024) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. அதன்படி ஸ்பேடெக்ஸ் - ஏ மற்றும் பி என 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. இந்த இரு செயற்கைக்கோள்களும் தலா 220 கிலோ எடை கொண்டது ஆகும். அதே சமயம் செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் பூமியில் இருந்து 500 கி.மீ. உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் வலம் வருகின்றன.

Advertisment

இத்தகைய சூழலில் தான் இரு விண்கலன்களையும் இணைக்கும் ஸ்பேடெக்ஸ் ஆய்வு நாளை (09.01.2025) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணில் இரு விண்ணில் மேற்கொள்ளப்பட இருந்த டாக்கிங் இணைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தரப்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செயற்கைக்கோள் 225 மீட்டர்இடைவெளியில் இருந்தபோது சுழற்சி மேற்கொள்ள முடியவில்லை. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் திட்டமிடப்பட்டிருந்த இரு செயற்கைக்கோள்கள் இணையும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.எல்.வி., சி - 60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட கிரப்ஸ் (CROPS) கருவியில் காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் விதைகள் அனுப்பப்பட்டன.

Advertisment

அதாவது விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட கிரப்ஸ் கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளை விடத் தொடங்கின. இது தொடர்பான படங்களை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த இஸ்ரோ, “பி.எஸ்.எல்.வி. சி - 60 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கிரப்ஸ் கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றி அடைந்துள்ளது. காராமணி விதையில் இருந்து இலைகள் துளிர் விட்டுள்ளது. இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனை மைல்கல் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.