Sonam's brother anguish meghalaya Honeymoon case

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் என்ற இளம் தம்பதி கடந்த மே மாதம் 22ஆம் தேதி மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது திடீரென்று காணாமல் போனார்கள். பல நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மனைவி சோனமை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் தான் தனது கணவரை கூலிப்படைகளை வைத்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

வேறு ஒரு நபரை காதலித்து வந்த சோனமுக்கு, ராஜா ரகுவன்ஷியோடு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, கணவர் ராஜா ரகுவன்ஷியுடன் மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது அவரை கூலிப்படைகளை வைத்து கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து சோனம், அவருடைய காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படைகள் மூன்று பேர் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனிலவு சென்ற போது கணவரை கூலிப்படைகளை வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகி வருகிறது.

இதற்கிடையில், மகன் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்த சோனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதே சமயம், சோனம் இந்த கொலையை செய்திருக்க மாட்டார் என்றும் அவர் மீது போலீசார் பொய் குற்றச்சாட்டை பதிந்துள்ளதாகவும் சோனமின் பெற்றோர் கூறி வருகின்றனர்.

Advertisment

Sonam's brother anguish meghalaya Honeymoon case

இந்த நிலையில், சோனமின் சகோதரர் கோவிந்த் இன்று (11-06-25) ராஜா ரகுவன்ஷியின் தாயார் உமாவைச் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இருவரும் கட்டிபிடித்து அழுத காட்சிகள், காண்போரை கண்கலங்க வைத்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கோவிந்த், ‘இந்த கொலைக்கு பின்னால் சோனம் இருப்பதாக இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆதாரங்கள் மூலம் சோனம் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்று 100 சதவீதம் உறுதியாக தெரிகிறது. ராஜா குடும்பத்தினரிடம் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். எனது சகோதரியை இந்த குடும்பத்திற்கு கொடுத்திருக்கிறேன், அதனால் நானும் இந்த குடும்பத்தில் ஒருவன் தான்.

சோனம் உடனான அனைத்து உறவுகளையும் எனது குடும்பம் துண்டித்துவிட்டது. எனக்கு ராஜாவைப் பிடிக்கும். சோனம் குற்றவாளியாக இருந்தால் அவர் கண்டிப்பாக தூக்கிலிடப்படவேண்டும். ராஜ் குஷ்வாஹா, சோனமை அக்கா என்று தான் அழைப்பார். ராஜ் குஷ்வாஹாவுக்கு கடந்த 3 வருடங்களாக சோனம் ராக்கி கட்டியிருக்கிறார். அவர்களது உறவில் எந்தவிதமான சந்தேகமும் ஏற்படவில்லை. நான் உண்மையின் பக்கம் நிற்கிறேன். ராஜா குடும்பத்திற்காக எனது வழக்கறிஞர் போராடுவார். போலீஸ் சொன்னது போல் சோனம் இந்த குற்றத்தை செய்தார் என்றால் அவர் குற்றவாளி தான்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.