Skip to main content

"மனித உரிமைகள் மீறல் என்ற பெயரில் நாட்டின் பிம்பத்தைக் கெடுக்க முயற்சி" - பிரதமர் மோடி எச்சரிக்கை!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

Narendra Modi

 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன நாள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் சிலர் நாட்டின் பிம்பத்தைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு; 

 

'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்' ஆகியவற்றுடன் தேசம் முன்னேறுகிறது. ஒரு வகையில், இது அனைவருக்கும் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான அடிப்படைக் கொள்கையிலும் செயல்படுகிறது. அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கினால் & அது ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என்றால், அது உரிமைகள் குறித்த பிரச்சனையை எழுப்பும்; அதனால்தான் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடன் நாங்கள் முன்னோக்கிச் செல்கிறோம்.

 

சுதந்திரத்திற்குப் பிறகும், நமது அரசியலமைப்பு, சமத்துவம் குறித்த புதிய கோணத்தை உலகிற்கு அளித்தது. கடந்த தசாப்தங்களில், உலகம் பல முறை திசைதிருப்பப்பட்டது, ஆனால் இந்தியா அதன் கொள்கைகளில் உறுதியாக இருந்தது.இன்று, இந்தியா பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஊதியத்துடன் 26 வார மகப்பேறு விடுப்பை வழங்கி வருகிறது. அடிப்படையில் இது பிறந்த குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.  பல தசாப்தங்களாக, முஸ்லீம் பெண்கள் முத்தலாக் சட்டத்திற்கு எதிராகச் சட்டங்களைக் கோரி வருகின்றனர். முத்தலாக் சட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு புதிய உரிமைகளை வழங்கினோம். ஹஜ்ஜின் போது முஸ்லீம் பெண்களை 'மஹ்ரம்' நிர்பந்தத்திலிருந்து நமது அரசாங்கம் விடுவித்தது 

 

பெண்களின் பாதுகாப்புக்காக 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மருத்துவம், காவல்துறை தொடர்பான உதவிகளை வழங்கவும், மனநல ஆலோசனை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்கவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 650 க்கும் மேற்பட்ட விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் சில சம்பவங்களில் மனித உரிமை மீறல்களைப் பார்க்கிறார்கள் ஆனால் அதைப் போன்ற மற்ற சம்பவங்களில் அதனைப் பார்ப்பதில்லை. அரசியல் கண்ணாடிகள் மூலம் பார்க்கும் போது மனித உரிமைகள் மீறப்படுகின்றன. பாரபட்சமான இந்த நடத்தை ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும். பாரபட்சமான நடத்தை மூலம் அவர்கள் நாட்டின் பிம்பத்தைச் சேதப்படுத்த முயற்சிக்கின்றனர்.

 

சிலர் மனித உரிமை மீறல் என்ற பெயரில் நாட்டின் பிம்பத்தைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள், மக்கள் அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனித உரிமைகள் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் கூட தனித் தனியாக அல்லாமல் இரண்டையும் ஒன்றாக விசாரிக்க விவாதிக்க வேண்டும். தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வைத் தவிர, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் கடமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.


இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.