முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடக, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடமும் என மொத்தம் 9 இடங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நீடித்து வருகிறது. 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. 50 லட்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் நடந்து வரும் சோதனை குறித்து ப.சிதம்பரம் அவரது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், ''சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் சிபிஐ நடத்திவரும் சோதனையில் அவர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ தரப்பில் காட்டப்பட்ட எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை. சோதனை நடந்து வரும் சூழல் சுவாரஸ்யமானது' என தெரிவித்துள்ளார்.