Skip to main content

"இவர்களது செயல்பாடு நீதிக்காக அல்ல" -ஹத்ராஸ் வழக்கு குறித்து ஸ்ம்ருதி இரானி கருத்து...

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

smrithi irani about hathras case

 

 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என குரல்கள் எழுந்துவரும் சூழலில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானி, யோகி ஆதித்யநாத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன. 

 

உயிரிழந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீஸாரே இரவு நேரத்தில் தகனம் செய்ததாக கூறப்படுவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தது என அடுத்தடுத்து இந்த விவகாரத்தை சர்ச்சைகள் சூழ்ந்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரைன், ககோலி ஹோஷ் தஸ்திதார், பிரதிமா மொண்டல் ஆகியோர் நேரில் சென்றபோது ஹத்ராஸ் எல்லையில் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், டெரிக் ஓ பிரைன் போலீஸாரால் கீழே தள்ளிவிடப்பட்டார்.

 

அப்போது, எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய எம்.பி., பிரதிமா மொண்டல் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்ததும் ஆண் போலீஸார் அவரை தொட்டதாகவும் முன்னாள் எம்.பி., மமதா தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில், இந்த வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என குரல்கள் எழுந்துவருகின்றன. 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ம்ருதி இரானி, "முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளார். ஹத்ராஸ் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் வந்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை வெளியாகிவிட்டால் யோகி நிச்சயம் கடும் நடவடிக்கைகளை எடுப்பார். மக்கள் காங்கிரஸ் என்ன மாதிரியான அரசியல் செய்கிறது என்பதை அறிந்துதான் 2019-ல் பாஜகவுக்கு வாக்களித்தனர். ஜனநாயகத்தில் எதை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம், நாம் அதை நிறுத்த முடியாது. ஆனால் ஹத்ராஸ் வழக்கில் இவர்களது செயல்பாடு அரசியல் ஆதாயம் தானே தவிர நீதிக்காக அல்ல" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாதவிடாய் குறித்த ஸ்மிருதி இரானி கருத்தால் சர்ச்சை! 

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Minister Smriti Irani's statement on menstruation paid leave

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச. 13ம் தேதி) மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. இது தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ள பதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று (டிச. 13ம் தேதி) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொடுத்துள்ள பதில் பெண்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலங்களவையில் எம்.பி. மனோஜ் குமார் ஜா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு (உடல் ஊனம்) இல்லை. இது இயற்கையாக பெண்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வு. மாதவிடாய் வராத ஒருவர் மாதவிடாய் குறித்து குறிப்பிட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்வைக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

இதேபோல், கடந்த வாரம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவதற்கான எந்த முன்மொழிவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்தக் கருத்துகள் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Next Story

“காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது” - வரவேற்பதாக மத்திய அமைச்சர் பேச்சு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

"Congress has openly declared" - Union Minister's speech of welcome

 

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.

 

அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். இதனை அடுத்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் பிரதமரின் பயணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பிரதமரின் அமெரிக்கப் பயணம், பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல ஒப்பந்தங்களை செய்துகொண்டன. செமிகண்டக்டர் சப்ளை செயின் மற்றும் இன்னோவேஷன் பார்ட்னர்ஷிப் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆராய்ச்சியை மட்டுமல்ல, வணிக வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும்” என்றார்.

 

அதேபோல் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்து வருகிறது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் குறித்தும் ஸ்மிருதி இராணியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பிரதமர் மோடியை தங்களால் தனியாக தோற்கடிக்க முடியாது என்றும், அதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவை என்றும் பகிரங்கமாக அறிவித்த காங்கிரஸுக்கு எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.