Skip to main content

ஜேஎன்யு பல்கலைக்கழக சுவரில் கிறுக்கப்பட்ட வாசகங்கள்; பதற்றத்தில் டெல்லி 

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Slogans scrawled on the walls of JNU University; Delhi in tension

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்யூனிச, அம்பேத்கரிய மாணவர்கள் இயக்கத்துக்கும் இந்துத்துவ ஏ.பி.வி.பி மாணவர்கள் இயக்கத்துக்குமிடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமான ஒன்று. கடந்த நான்காண்டுகளில் மட்டும் சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம், தேர்வு முறைக்கு எதிரான போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. காவல்துறையினர் தடியடி நடத்திய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. சமீபத்தில் ராம நவமியன்று அங்குள்ள விடுதியில் வழக்கம்போல் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தது பிரச்சனையானது. கடந்த நவம்பரில்கூட மாணவர் குழுவுக்குள் நடந்த பிரச்சனையில் காவல்துறை வரைக்கும் புகார் சென்றது.

 

இப்படியான சூழலில்தான், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இங்குள்ள பேராசிரியர்களின் அறைச்சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்களை சிவப்பு வண்ண பெயிண்ட்டால் யாரோ எழுதியது சர்ச்சையாகியிருக்கிறது. சிவப்பு வண்ண பெயிண்ட்டால் 'பிராமணர்களே இங்கிருந்து வெளியேறுங்கள்', 'ஷாகாவுக்கே திரும்பிச் செல்லுங்கள்', பிராமணர்களே பனியாக்களே உங்களைத் தேடி வருகிறோம்', 'ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்' என்பது போன்ற மிரட்டலான வாசகங்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

 

இதுவரை அந்த வாசகங்களை எழுதியவர்கள் யாரென்பது கண்டறியப்படவில்லை. பிராமணர்களுக்கு எதிரானவர்கள் எழுதியிருப்பார்களா அல்லது சர்ச்சையை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இந்துத்துவ அமைப்பினரே இதுபோன்று செய்திருப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த வாசகங்கள் குறித்த செய்தி பரவத் தொடங்கவுமே கல்லூரியைத் தாண்டி, பொதுவெளியிலும் பலராலும் கண்டிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் #BrahminLivesMatter என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிராமணர்களுக்கு ஆதரவான பதிவுகளைப் போடத் தொடங்கினார்கள். இந்த விவகாரத்தில் இதுவரை எழுதியவர்களைக் கண்டறிய முடியாத நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் அமைப்பு இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. 

 

ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினரோ கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் இறங்கி சமூக அமைதியைக் கெடுப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி, கல்லூரி சுவர்களில் ஜாதி, மத ரீதியான வாசகங்கள் எழுதப்பட்டு அதன்மூலம் மிகப்பெரிய கலவரம் நடப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது யாராக இருந்தாலும் அவர்களை விரைவாகக் கண்டறிந்து சட்டப்படி கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். கல்விக்கூடங்களில் ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.