/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gfdfgg.jpg)
கடந்த ஆண்டு புல்வாமாவில் நடத்தப்பட்ட வாகனம் வெடிகுண்டு தாக்குதல் போல, மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்திய ராணுவத்தினர் நேற்று முறியடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியை ஒட்டிய புல்வாமாவில் இந்திய ராணுவத்தினர் சென்ற பேருந்துகளின் மீது தீவிரவாதிகளின் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மோதியதில் 40 வீரர்கள் பலியாகினர், 20 வீரர்கள் காயமடைந்தனர். நாடு முழுவதும் இந்தச் சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலிருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்திய ராணுவத்தினர் இன்று முறியடித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் ராஜ்போரா நகரில் ராணுவ முகாமிற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று வந்துள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கிடைத்த உளவுத்துறை அறிக்கையின்படி தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என முன்னெச்சரிக்கையாக இருந்த இந்திய வீரர்கள் சந்தேகத்திற்கிடமான அந்த காரை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அதிலிருந்த நபர் தப்பியோடிய நிலையில், காரை ராணுவத்தினர் கைப்பற்றினர். பிறகு நடந்த சோதனையில் அந்த வாகனத்தில் சுமார் 40 கிலோ வெடிமருந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாகனஎண்ணானது, ஸ்கூட்டர் ஒன்றின் எண் என்றும், காரை வீரர்கள் நெருங்கியபொழுது, அதிலிருந்த பயங்கரவாதி தப்பி ஓடி விட்டான் எனவும்கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட வாகனம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு வெடிக்கவைக்கப்பட்டது.
Follow Us