Siddaramaiah's wife who gives away lands at Muda fraud case

கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார். இதனையடுத்து, ஆளுநர் அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடகா முதல்வர் சித்தராமையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, முடா வழக்கில் விசாரணை நடத்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீசாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் அளித்த புகாரின் பேரில், சித்தராமையா மீது மைசூர் லோக் ஆயுக்தா போலீசார் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையா, இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி, 3வது குற்றவாளியாக சித்தாரமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, 4வது குற்றவாளியாக தேவராஜ் என்பவரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், நில முறைகேடு விவகாரத்தில், மைசூர் அதிகாரியால் தனக்கு ஒதுக்கப்பட்ட மனைகளை திருப்பித் தரகர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி முன்வந்துள்ளார். இது குறித்துப் பேசிய முதல்வர் சித்தராமையா, “என்னைப் பொருத்தவரை பணமோசடி கிடையாது. எனது சட்டக் குழு இதை எதிர்த்துப் போராடும். இதனால் மனமுடைந்த என் மனைவி அந்த நிலங்களைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளார். அவள் எந்த சர்ச்சையையும் விரும்பவில்லை. எனது நான்கு தசாப்த கால அரசியலில் தலையிடாமல் என் குடும்பத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர், என் மீதான வெறுப்பு அரசியலுக்கு பலியாகி உளவியல் சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார். இருப்பினும், மனைகளை திருப்பித் தர என் மனைவி எடுத்த முடிவை நான் மதிக்கிறேன்” என்று கூறினார்.