Skip to main content

அப்பாவி பழங்குடி மக்கள் மீது துப்பாக்கிசூடு... நாகாலாந்தில் இணைய சேவை முடக்கம்!  

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

Shooting of innocent tribal people ... Internet service shut down in Nagaland!

 

நாகாலாந்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

நாகாலாந்தில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மீது தவறுதலாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேரும், தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் காயமடைந்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் என சந்தேகித்து பழங்குடியின மக்கள் மீது இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அந்த பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் முகாமை பழங்குடி மக்கள் சுற்றிவளைத்து போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடித்துக் கொண்டிருப்பதால் இணையதள சேவை என்பது அந்த பகுதியில் முடக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே நாகாலாந்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்த நிலையில், தமிழக நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு திடீர் பயணமாக தற்போது அவர் டெல்லி புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம்; பயந்ததா பாஜக? 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Elections also unface Manipur; Why bjp afraid?

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் அந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  மேகாலயாவில் இரண்டு தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே மணிப்பூரில் நிகழ்ந்த கலவரம் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த நிலையில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் போட்டியிடாமல் மாநில கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி இந்த தகவலை பகிர்வதாக வடகிழக்கு மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி வந்து சேரவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில்  பயம் காரணமாக தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம் காட்டியுள்ளார் மோடி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story

“உணவு பழக்கத்தை வைத்து மக்களை கொச்சைப்படுத்தக் கூடாது” - நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Nagaland Governor L. Ganesan criticized Rs.Bharathi

 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ். பாரதிக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, “ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்து போடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறார். நாகலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அவரை ஊரை விட்டே விரட்டியடித்தனர்.  

 

நான் சொல்வதை தவறாக நினைக்கக் கூடாது. நாகலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள். நாய் கறி சாப்பிடுபவர்களே, இவ்வளவு சொரணை இருந்து இந்த ஆளுநரை விரட்டியடித்தார்கள். அப்படி என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் எண்ணி பார்க்க வேண்டும்” என்று பேசினார். இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. உணவு பழக்கத்தை வைத்து நாகலாந்து மக்களை கொச்சைப்படுத்தக்கூடாது. சாப்பிடும் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை வைத்து அவர்களின் குணாதிசயத்தை முடிவு பண்ணக்கூடாது. ஒட்டுமொத்த நாகலாந்து மக்களையும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் போல் சித்தரிப்பதா?. நாகலாந்து மக்களுக்கும், தமிழக மக்களுக்குமான இணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.