
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. அதாவது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் இதுவரை 170 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களில் உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விமானம் வானில் செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மதியம் 01.39 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து குறித்த அழைப்பு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மே டே கால் (May day call - விமானப் போக்குவரத்து நடை முறையில் மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு துயர அழைப்பு ஆகும்) எனப்படும் ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும் அழைப்பு விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது. உலக அளவில் விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் ஆபத்துக் காலங்களில் அழைக்கும் குறியீடு ஆகும்.
இந்நிலையில் இந்த விமானத்தில் குறைபாடுகள் இருந்ததாக டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்குச் சென்ற பயணி ஆகாஷ் வாட்ஸ்டா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், “இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு நான் அதே மோசமான விமானத்தில் இருந்தேன். நான் டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தேன். இந்த பயணத்தின் போது அசாதாரணமான விஷயங்களைக் கவனித்தேன். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ட்வீட் செய்ய ஒரு வீடியோவை உருவாக்கினேன். மேலும் விவரங்களைத் தர விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த விமான விபத்து காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையம் பயணிகளின் வசதிக்காக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.