சிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 17 சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ஹீரலால் நாகர் கூறுகையில், “ இது மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம். இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஒருவர் 100% தீக்காயம் அடைந்துள்ளார். அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கோட்டா போலீஸ் எஸ்.பி. அம்ரிதா துஹான் கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம். காளிபஸ்தியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கலசத்துடன் இங்கு கூடியிருந்தனர். ஒரு குழந்தை சுமார் 20 முதல் 22 அடி வரை உயரமுள்ள குழாயை வைத்திருந்தது. இந்த குழாய் உயர் அழுத்த கம்பியை உரசியுள்ளது. அந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற அங்கு இருந்த குழந்தைகள் அனைவரும் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவர் 100% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாரேனும் அலட்சியமாக இருந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.