shivamogga

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் ஷிவமோகாவில், பஜ்ரங் தள அமைப்பின் உறுப்பினர் ஹர்ஷா என்பவர் கடந்த ஞாயிறு அன்று இரவு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் ஷிவமோகாவில் வலதுசாரி இயக்கங்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Advertisment

இதனையடுத்து சட்டம் ஒழுங்கை காக்க கர்நாடகா காவல்துறையினர், அங்கு 144 தடையுத்தரவை பிறப்பித்தனர். இந்த தடையையும் மீறி நேற்று ஷிவமோகாவில் வன்முறை வெடித்தது. காவி துண்டு அணிந்தவர்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கடைகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியதோடு, சில இடங்களில் தனியார் வாகனங்களுக்கும், காவல்துறையின் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளைக் குறிவைத்து இந்த போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தச்சூழலில் ஹர்ஷா கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேரைக் கைது செய்த கர்நாடக காவல்துறையினர், தற்போது மேலும் மூவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களைத் தவிர மேலும் 12 பேரிடம் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர், ஷிவமோகாவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், இந்த இரண்டு நாட்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்படாது எனவும் அறிவித்துள்ளனர்.