Skip to main content

"100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு" - ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு...

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

shaktikanta das keynote address at the 7th SBI Banking and Economic Conclave

 

கரோனா தாக்கத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

மும்பையில் நடைபெற்ற எஸ்பிஐ வங்கியின் ஏழாவது பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சக்தி காந்த தாஸ், "கரோனா வைரஸால் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார, சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, உற்பத்தி, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் இதுவரையில்லாத வகையில் எதிர்மறையான பாதிப்பை கொடுத்துள்ளது, உலகளாவிய அளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்து வருகிறது. இதுவரை 135 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதை கையாளவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இவற்றின் காரணமாக, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கியின் முதன்மையான முன்னுரிமை வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் வங்கி முறை, நிதிச்சூழல் முறை ஆகியவை தகுதியுடையதாக இருக்கிறது. கரோனா பாதிப்புக்குபின் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கவும், முதலீடுகள் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு திட்டம் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும்'' என தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தாண்டில் வந்த புதிய மாற்றம்; ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
A Guide to Online Money Transactions to new rules

இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை தொடங்கி, செல்போன் ரீசார்ஜ், மின்கட்டணம்,வீட்டு வாடகை என பலவற்றுக்கும் ஆன்லைன் மூலமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், யுபிஐ பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2024 முதல் இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. 

அதன்படி, ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்களை செயலிழக்கச் செய்ய வேண்டுமென செயலிகளின் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, ஆன்லைன் பரிவர்த்தனை மோசடிகளை குறைக்கும் வகையில் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செயலிகள் மூலம் ரூ.2000க்கு மேல் தவறுதலாக ஒரு புதிய பயனாளருக்கு பணத்தை அனுப்பியிருந்தால் அதை நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும், ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகள் மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பரிமாற்ற கட்டணம், வணிக பரிமாற்றங்களுக்கு மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி ஏடிஎம்மில் எவ்வாறு டெபிட் அட்டை மூலமாக பணம் எடுக்க முடியுமோ அது போல நமது செல்போனில் உள்ள யுபிஐ கியுஆஇ கோடை ஸ்கேன் செய்து அதில் பணம் எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஐந்து விதிமுறைகளும் புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.