Skip to main content

விமானத்தில் வாக்குப்பெட்டிக்கு தனியாகப் பயணச்சீட்டு! 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

A separate ticket for the ballot box in the plane!

 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மிஸ்டர்.பேலட் பாக்ஸ் என்ற பெயரில் பயணச்சீட்டு பெறப்பட்டு, விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது தற்போது தெரிய வந்ததுள்ளது.

 

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 15- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

 

இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டனர்.

 

இதன்படி நேற்று முன்தினம் (18/07/2022) நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் நாளை (21/07/2022) டெல்லியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

இந்த முறை விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக சொகுசு இருக்கையில் இந்த வாக்குப் பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அதாவது 'மிஸ்டர். பேலட் பாக்ஸ்' என்ற பெயரில் ஒரு விஐபி எப்படி டெல்லி சென்றால், அரசு எப்படி அவருக்கு பாதுகாப்பு அளிக்குமோ அந்த வகையில் இந்த ஏற்பாடுகள் இருந்தது.

 

'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' சீல் வைக்கப்பட்டு மாநில காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையங்களில் சோதனை முடிந்த பிறகு தனி வாகனத்தில் 'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' விமானத்திற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டது.

 

அப்போது விமானங்களில் வாக்குப்பெட்டிகளை வைக்க தனி பயணச்சீட்டு பெறப்பட்டதும், அதில் மிஸ்டர்.பேலட் பாக்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. அந்த பெட்டியுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும் டெல்லி சென்று அந்த வாக்குப்பெட்டியை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய அறிவுறுத்தல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Electoral Officer Important Instructions

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, “மக்களவைப் பொதுத்தேர்தல், 2024 மற்றும் விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (19.04.2024) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். இன்று (17.04.2024) மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ்  விதிமுறைகள் செயலில் இருக்கும்.

அதவாது, தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம். தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும். எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தவும், ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் யாரும் பரப்புரை செய்யக் கூடாது.

இந்த இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2) ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். தொகுதிக்கு  வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6.00 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6.00 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். 

Chief Electoral Officer Important Instructions

மக்களவைத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதியானது, மக்களவைத் தொகுதி முழுவதும் அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான மக்களவைத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்காக தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் அல்லது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம். கட்சி பணியாளர்களின் வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும். வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.