மேற்கு வங்காளத்தில் ‘பிஎம் போஷன்’ என்ற திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் இந்து மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு தனித்தனியாக உணவு வழங்கி வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தின் நாடன் காட் பகுதியில் கிஷோரிகஞ்ச் மன்மோகன்பூர் என்ற அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனியாக உணவு வழங்கப்படும் நடைமுறை பல ஆண்டுகளாக நடந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இந்து மாணவர்களுக்கு ஒரு சமையல்காரர் சமைத்த உணவும், முஸ்லிம் மாணவர்களுக்கு முஸ்லிம் சமையல்காரர் தயாரிக்கப்பட்ட உணவும் பரிமாறப்பட்டு வருகிறது. 

இரண்டு மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தனித்தனி தட்டுகள், கிண்ணங்கள், கரண்டிகள், எரிவாயு அடுப்புகள், ஓவன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வகுப்புகளில் ஒரே பெஞ்சுகளில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், மதிய உணவின் போது மட்டும் அவர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் இந்த பாகுபாடு பல ஆண்டுகளாக நடந்து வருவதாக உள்ளூர்வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

Advertisment

பொது சமூகத்தில் மதங்களாகவும், சாதிகளாகவும் பிரிந்து கிடக்கும் மனிதர்கள், அனைவரும் சமம் என எண்ண வேண்டும் என்பதற்காக ஒரே சீருடை, உணவு போன்ற திட்டங்கள் பள்ளிகளில் செயல்படுத்த வருகிறது. ஆனால், அந்த பள்ளியிலும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்களை பாகுபாடோடு நடத்துவது என்பது கொடூரமான விஷயமாகும்.