Skip to main content

சென்செக்ஸ் 346 புள்ளிகள் வீழ்ச்சி! அதனாலென்ன... முதலீட்டுக்கு இது சரியான தருணம்தான்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

ggg

 

இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சென்செக்ஸ் 346 புள்ளிகள், நிப்டி 94 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தன. எனினும், சந்தை இறக்கத்தில் உள்ள தருணத்தை முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

 

சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு சந்தைகளுமே புதன்கிழமை (ஜூலை 8) சிவப்பு நிறத்தில் முடிவடைந்திருக்கிறது. தொடர்ச்சியாக ஆறு நாள்கள் ஏறுமுகத்தில் இருந்த வர்த்தகம் நேற்றுடன் அறுபட்டுள்ளன. உலகளவில் பொருளாதார மந்தநிலை, வளர்ச்சி குறித்த கலவையான கணிப்புகளாலும், லாபத்தை புக்கிங் செய்யும் முனைப்புடன் பலரும் பங்குகளை விற்க முனைந்ததாலும் இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டன.


மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், நேற்று ஒரே நாளில் தடாலடியாக 346 புள்ளிகள் / 0.94 சவீதம் சரிந்து 36,329.01 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 94 புள்ளிகள் / 0.87 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டு, 10,705.75 புள்ளிகளில் முடிந்தது.


''சந்தையில் வர்த்தகம் ஏற்றம் காண்பதற்கு முன்பாக குறியீட்டில் சிறிது சரிவு காணப்படுவது இயல்பானதுதான். பொதுவாக நேற்றைய வர்த்தக முடிவு என்பது அபாயகரமானது அல்ல. உலகளவில் வங்கிக் குறியீடுகள் தொடர்பாக சமீபத்தில் பரவிய எதிர்மறையான கணிப்புகளாலும் சந்தையில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரும்பாலான முதலீட்டாளர்களின் பார்வையும் டி.சி.எஸ். நிறுவனத்தின் மீது குவிந்திருக்கிறது. அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று (ஜூலை 9) வெளியாகின்றன. இன்று அல்லது நாளையே சந்தைகள் மீண்டும் ஏற்றம் பெறக்கூடும்,'' என்கிறார் ரேலிகர் புரோக்கிங் நிறுவன துணைத்தலைவர் அஜித் மிஸ்ரா.


முதலீட்டுக்கான தருணம்:


நிப்டியில் இப்போதுள்ள வீழ்ச்சி என்பது முதலீட்டுக்கு உகந்த தருணமாக பார்க்கிறார்கள் சந்தை நிபுணர்கள். ஆனாலும், சந்தையில் நிலையற்ற தன்மை, அடுத்து வரும் நாள்களிலும் தொடரும் என்கிறார் கோட்டக் செக்யூரிட்டீஸின் சஹாஜ் அகர்வால்.


நிப்டியின் இன்றைய நிலை எப்படி?:


நிப்டியில் இன்றும் வர்த்தகத்தின் போக்கு சரிவை நோக்கிச் செல்லும்பட்சத்தில் அதன் இண்டெக்ஸ் 10,638.93 ஆகவும், அதைத் தொடர்ந்து 10,572.07 ஆகவும் இருக்கலாம். ஒருவேளை, சந்தை ஏற்றம் பெற்றால் 10,810.23 - 10,914.67 வரையிலும் கூட எழுச்சி பெறலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.


நிப்டி வங்கிப் பங்குகள்:


தேசிய பங்குச்சந்தைகளில் நேற்று வங்கிப் பங்குகளின் குறியீட்டு எண் 0.19 சதவீதம் வரை குறைந்து, 22,584.65 புள்ளிகளில் முடிவடைந்தது. குறியீட்டுக்கு ஆதரவு மைய நிலை 22,362.60 ஆகவும், அதைத் தொடர்ந்து 22,140.50 ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிப் பங்குகள் ஏற்றம் காணும் நிலையில் அதன் வளர்ச்சி 22,943.70 முதல் 23,302.70 வரை இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆதாயம் தரும் பங்குகள்:


சந்தையில் நிலவும் வர்த்தகம் மற்றும் காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் பின்வரும் பங்குகள் ஆதாயம் அளிக்கலாம் எனச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


அதன்படி, என்.சி.சி., எல்.ஐ.சி. ஹவுசிங், கட்டி, அம்புஜா சிமென்ட்ஸ், இ.ஐ.ஹெச்., எஸ்.ஜே.வி.என்., மணலி பெட்ரோகெம், ஜி.எஸ்.எப்.சி., தாமஸ் குக், சுதர்ஸன் கெம், என்.சி.எல். இண்டஸ்ட்ரீஸ், ஆஸ்டெக் லைப்சயின்சஸ், ஆர்க்கிட்பிளை இண்டஸ்ட்ரீஸ், ஹேரீஸன்ஸ், சிம்ப்ளெக்ஸ் இன்ப்ரா, பாம்பே பர்மா, ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரன்ட்ஸ் ஆகிய பங்குகள் ஆதாயம் அளிக்கலாம் என்கிறார்கள்.

 

http://onelink.to/nknapp


கட்டாயம் முதலீடு செய்யலாம்...:


ஜூபிலான்ட் லைப், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், டிக்ஸான் டெக்னாலஜீஸ் (இண்டியா), லார்சன் அன்டு டூப்ரோ இன்போடெக், பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் கடந்த 52 வார உச்ச நிலையை உடைத்து ஏற்றம் கண்டுள்ளதால், மேலும் இப்பங்குகள் உயர வாய்ப்பு உள்ளது. அதனால் இப்பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

 

இன்று முடிவுகள் அறிவிக்கும் நிறுவனங்கள்:


டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அர்விந்த் பேஷன்ஸ், சத்பவ் இன்ஜினியரிங், அரிஹண்ட் கேபிடல் மார்க்கெட்ஸ், பிராடி அன்டு மோரீஸ் இன்ஜினியரிங், சி.ஐ.எல். நோவா பெட்ரோகெமிக்கல்ஸ், ஹெச்.பி.எல். எலக்ட்ரிக் அன்டு பவர், ஸ்கில் இன்ப்ராஸ்டிரக்சர், ட்ரீ ஹவுஸ் எஜூகேஷன், திருப்பதி டயர்ஸ், டபுள்யூ.ஹெச். பிராடி அன்டு கோ ஆகிய நிறுவனங்கள் இன்று (ஜூலை 9) ஜனவரி & மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிடுகின்றன. இதன் முடிவுகளின் அடிப்படையில் இப்பங்குகளின் மீதான வர்த்தகம் ஏற்ற, இறக்கம் காணும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Elon Musk's visit is suddenly canceled!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, எலான் மஸ்க் நாளை (21-04-24) இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த பயணம் திடீரென ரத்தாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை புரிவதை தாமதப்படுத்த்தியுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு” - டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Investment of Rs.9 thousand crores TN Govt Agreement with Tata Company

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

அதாவது தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே. விஷ்ணு, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் வி. அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கி. செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.