ADVERTISEMENT

சீக்ரெட் ரூம் புதையல்... இளம்பெண் சபியா கொலை வழக்கில் புதிய திருப்பம்!

07:48 PM Sep 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு, உடலின் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன், மிகக் கோரமான நிலையில், சுர்ஜாகுந்த் பகுதியில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள சங்கம் விகார் பகுதியில் வசித்து வருபவர் சமித் அகமது. இவரது மகள் 21 வயதான சபியா. புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவரான சபியா, நான்கு மாதங்களுக்கு முன்புதான் குடிமையியல் பாதுகாப்பு அதிகாரியாக, லஜ்பத் நகர் ஆட்சியர் அலுவலகத்தில் சேர்ந்துள்ளார். வெள்ளம், கரோனா போன்ற ஆபத்தான காலகட்டங்களில், போலீஸுக்கு உறுதுணையாக இருப்பதே குடிமையியல் பாதுகாப்பு அதிகாரிகளின் பணி. போலீஸைப் போலவே சீருடை இவர்களுக்கு வழங்கப்படுகிறது. கிட்டதட்ட நம்ம ஊர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போலச் செயல்பட்டு வருகிறார்கள்.

தினமும் கலெக்டர் அலுவலகம் செல்லும் சபியா வழக்கமாக மாலை 08 மணிக்குள் வீடு திரும்பிவிடுவார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி, வேலைக்குச் சென்றவர் மாலை 08 மணியளவில் வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால், அதை அவரின் குடும்பத்தார் கவனிக்கவில்லை. பிறகு, சபியாவின் அழைப்பை பார்த்து அவருக்கு ஃபோன் செய்தபோது, ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால், கலக்கமடைந்த பெற்றோர், சபியா பணியாற்றும் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து சரியான விளக்கம் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வருகைப் பதிவேட்டைப் பார்க்கவேண்டும் எனக் குடும்பத்தார் கூறியபோதும் அங்கிருந்த காவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, இரவு 10 மணி அளவில், சபியாவின் அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, "ஒரு வழக்கு சம்பந்தமாக, சபியா உயரதிகாரியுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார். அச்சம் கொள்ளத் தேவையில்லை" என ஆறுதல் கூறியுள்ளார். இதனால், நிம்மதியடைந்த சபியாவின் குடும்பத்தினர், சபியா வந்துவிடுவார் எனக் காத்திருந்துள்ளனர். ஆனால், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த இரண்டு போலீஸ்காரர்கள், சபியாவின் உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர். ஒரு கணம் என்ன நடந்தது எனப் பிடிபடாமல் இருந்த சபியாவின் பெற்றோர், பின்னர் கதறித் துடித்து அழுதுள்ளனர். என்ன நடந்தது? சபியாவுக்கு என்ன ஆனது? எனத் தெரியாமல் சபியாவை அடையாளம் காட்டச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. சபியாவின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், சபியா வன்புணர்வு செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், சபியாவின் அண்ணன் மோனிஸ் சைஃபி வெளியிட்ட காணொளிப் பதிவில், "என் தங்கையின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவளின் வாய் வழியாகச் சென்ற கத்தி கழுத்து வழியாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அவளின் மார்பகங்கள் அறுத்து வீசப்பட்டிருக்கின்றன. என் தங்கச்சியைப் பற்றி நானே இப்படிச் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே. கடவுளே என்னை மன்னித்துவிடு" எனக் கலங்கினார்.

இந்த நிலையில், கொலை நடந்த அதேநாள் ஹரியான மாநிலத்தில் உள்ள சுர்ஜாகுந்த் போலீஸ் ஸ்டேஷனில் நிஜாமுதீன் எனும் 25 வயது நபர் சரணடைந்து, "நான் ஜெய்த்பூர் பகுதியைச் சேர்ந்தவன். நான்தான் சபியாவை கொலை செய்தேன்" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். "சபியாவும் நானும் காதலித்து வந்தோம். சமீபத்தில், வீட்டுக்குத் தெரியாமல், திருமணமும் செய்துகொண்டோம்" எனக் கூறினான். மேலும், "சபியாவின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால், நான் சபியாவிடம் இதுகுறித்து பேசினேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சபியாவை கொன்று உடலை சுர்ஜாகுந்த் ஆற்றோரம் உள்ள புதர்ப் பகுதியில் வீசிச் சென்றுவிட்டேன்" எனக் கூறியுள்ளான்.

இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள சபியாவின் குடும்பத்தினர், "போலீஸ் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது. இது திட்டமிட்ட கொலை. என் மகளை நான்குக்கும் மேற்பட்டவர்கள் வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர். திருமணம் செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். எங்கள் மகள் ஒருபோதும் அப்படிச் செய்பவள் அல்ல. நிஜாமுதீனுக்கும் சபியாவுக்கும் திருமணம் ஆனதாகக் கூறும் காவல்துறை, அது சம்பந்தமான ஆவணத்தை இதுவரை வெளியிடவில்லை. ஒருவேளை திருமணம் நடந்தது உண்மை என்றால் கூட, காதலித்த பெண்ணின் மார்பை அறுக்கும் அளவுக்கா ஒருவன் துணிவான். இவனுடன் இன்னும் இருவருக்கு சபியாவின் கொலையில் சம்பந்தம் இருக்கிறது. அவர்கள் சபியாவுடன் பணியாற்றியவர்கள். இந்த இருவர் குறித்த எங்கள் புகாரை ஏற்க சங்கம் விகார் காவல்துறை மறுத்துவிட்டது. அவர்கள் இப்போது தலைமறைவாகிவிட்டனர். சபியா வழக்கில் சரணடைந்த குற்றவாளியை ஒரு வாரம்வரை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பதற்கு போலீஸ் தரப்பில் உரிய விளக்கம் தரப்படவில்லை" என்கின்றனர்.

மேலும் சபியாவின் அப்பா இதுகுறித்து கூறுகையில், "என் மகள் ஒருமுறை, தான் பணியாற்றும் அலுவலகத்தில், ஒரு ரகசிய அறை இருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இப்படி, அந்த அறைக்கு லஞ்சப் பணமாக தினமும் 4 லட்சம் வரை வருவதாகவும் கூறினார். இந்த நிலையில்தான், அவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ளார்" என்கிறார் கண்ணீருடன்.

தலைநகர் டெல்லியை உலுக்கிய நிர்பயா கொலைக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை சபியாவின் வழக்கு. ஆனால், நிர்பயாவின் வழக்குக்கு கிடைத்த ஆதரவு கொஞ்சம்கூட சபியாவுக்கு கிடைக்கவில்லை.

திருமண உறவு, ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ரகசியப் பணவறை, காவல்துறையின் அலட்சியம், தேசிய ஊடகங்களின் மவுனம் போன்றவை இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது. சபியா உடலின் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான வன்முறைக்கு எந்த நியாயமும் கற்பிக்கமுடியாது. இந்தியாவின் மகளைக் கொடூரமாகக் கொலை செய்த உண்மையான குற்றவாளி யாராயினும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT