Skip to main content

சீக்ரெட் ரூம் புதையல்... இளம்பெண் சபியா கொலை வழக்கில் புதிய திருப்பம்!

Published on 09/09/2021 | Edited on 10/09/2021

 

 Secret room .. Unspoken Sabiya's story.. Lasting mystery in Delhi

 

பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு, உடலின் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன், மிகக் கோரமான நிலையில், சுர்ஜாகுந்த் பகுதியில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் உள்ள சங்கம் விகார் பகுதியில் வசித்து வருபவர் சமித் அகமது. இவரது மகள் 21 வயதான சபியா. புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவரான சபியா, நான்கு மாதங்களுக்கு முன்புதான் குடிமையியல் பாதுகாப்பு அதிகாரியாக, லஜ்பத் நகர் ஆட்சியர் அலுவலகத்தில் சேர்ந்துள்ளார். வெள்ளம், கரோனா போன்ற ஆபத்தான காலகட்டங்களில், போலீஸுக்கு உறுதுணையாக இருப்பதே குடிமையியல் பாதுகாப்பு அதிகாரிகளின் பணி. போலீஸைப் போலவே சீருடை இவர்களுக்கு வழங்கப்படுகிறது. கிட்டதட்ட நம்ம ஊர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போலச் செயல்பட்டு வருகிறார்கள்.

 

தினமும் கலெக்டர் அலுவலகம் செல்லும் சபியா வழக்கமாக மாலை 08 மணிக்குள் வீடு திரும்பிவிடுவார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி, வேலைக்குச் சென்றவர் மாலை 08 மணியளவில் வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால், அதை அவரின் குடும்பத்தார் கவனிக்கவில்லை. பிறகு, சபியாவின் அழைப்பை பார்த்து அவருக்கு ஃபோன் செய்தபோது, ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால், கலக்கமடைந்த பெற்றோர், சபியா பணியாற்றும் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து சரியான விளக்கம் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வருகைப் பதிவேட்டைப் பார்க்கவேண்டும் எனக் குடும்பத்தார் கூறியபோதும் அங்கிருந்த காவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 

அதையடுத்து, இரவு 10 மணி அளவில், சபியாவின் அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, "ஒரு வழக்கு சம்பந்தமாக, சபியா உயரதிகாரியுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார். அச்சம் கொள்ளத் தேவையில்லை" என ஆறுதல் கூறியுள்ளார். இதனால், நிம்மதியடைந்த சபியாவின் குடும்பத்தினர், சபியா வந்துவிடுவார் எனக் காத்திருந்துள்ளனர். ஆனால், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த இரண்டு போலீஸ்காரர்கள், சபியாவின் உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர். ஒரு கணம் என்ன நடந்தது எனப் பிடிபடாமல் இருந்த சபியாவின் பெற்றோர், பின்னர் கதறித் துடித்து அழுதுள்ளனர். என்ன நடந்தது? சபியாவுக்கு என்ன ஆனது? எனத் தெரியாமல் சபியாவை அடையாளம் காட்டச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. சபியாவின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், சபியா வன்புணர்வு செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்தில், சபியாவின் அண்ணன் மோனிஸ் சைஃபி வெளியிட்ட காணொளிப் பதிவில், "என் தங்கையின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவளின் வாய் வழியாகச் சென்ற கத்தி கழுத்து வழியாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அவளின் மார்பகங்கள் அறுத்து வீசப்பட்டிருக்கின்றன. என் தங்கச்சியைப் பற்றி நானே இப்படிச் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே. கடவுளே என்னை மன்னித்துவிடு" எனக் கலங்கினார்.

 

 Secret room .. Unspoken Sabiya's story.. Lasting mystery in Delhi

 

இந்த நிலையில், கொலை நடந்த அதேநாள் ஹரியான மாநிலத்தில் உள்ள சுர்ஜாகுந்த் போலீஸ் ஸ்டேஷனில் நிஜாமுதீன் எனும் 25 வயது நபர் சரணடைந்து, "நான் ஜெய்த்பூர் பகுதியைச் சேர்ந்தவன். நான்தான் சபியாவை கொலை செய்தேன்" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். "சபியாவும் நானும் காதலித்து வந்தோம். சமீபத்தில், வீட்டுக்குத் தெரியாமல், திருமணமும் செய்துகொண்டோம்" எனக் கூறினான். மேலும், "சபியாவின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால், நான் சபியாவிடம் இதுகுறித்து பேசினேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சபியாவை கொன்று உடலை சுர்ஜாகுந்த் ஆற்றோரம் உள்ள புதர்ப் பகுதியில் வீசிச் சென்றுவிட்டேன்" எனக் கூறியுள்ளான்.

 

இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள சபியாவின் குடும்பத்தினர், "போலீஸ் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது. இது திட்டமிட்ட கொலை. என் மகளை நான்குக்கும் மேற்பட்டவர்கள் வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர். திருமணம் செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். எங்கள் மகள் ஒருபோதும் அப்படிச் செய்பவள் அல்ல. நிஜாமுதீனுக்கும் சபியாவுக்கும் திருமணம் ஆனதாகக் கூறும் காவல்துறை, அது சம்பந்தமான ஆவணத்தை இதுவரை வெளியிடவில்லை. ஒருவேளை திருமணம் நடந்தது உண்மை என்றால் கூட, காதலித்த பெண்ணின் மார்பை அறுக்கும் அளவுக்கா ஒருவன் துணிவான். இவனுடன் இன்னும் இருவருக்கு சபியாவின் கொலையில் சம்பந்தம் இருக்கிறது. அவர்கள் சபியாவுடன் பணியாற்றியவர்கள். இந்த இருவர் குறித்த எங்கள் புகாரை ஏற்க சங்கம் விகார் காவல்துறை மறுத்துவிட்டது. அவர்கள் இப்போது தலைமறைவாகிவிட்டனர். சபியா வழக்கில் சரணடைந்த குற்றவாளியை ஒரு வாரம்வரை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பதற்கு போலீஸ் தரப்பில் உரிய விளக்கம் தரப்படவில்லை" என்கின்றனர்.

 

மேலும் சபியாவின் அப்பா இதுகுறித்து கூறுகையில், "என் மகள் ஒருமுறை, தான் பணியாற்றும் அலுவலகத்தில், ஒரு ரகசிய அறை இருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இப்படி, அந்த அறைக்கு லஞ்சப் பணமாக தினமும் 4 லட்சம் வரை வருவதாகவும் கூறினார். இந்த நிலையில்தான், அவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ளார்" என்கிறார் கண்ணீருடன்.

 

தலைநகர் டெல்லியை உலுக்கிய நிர்பயா கொலைக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை சபியாவின் வழக்கு. ஆனால், நிர்பயாவின் வழக்குக்கு கிடைத்த ஆதரவு கொஞ்சம்கூட சபியாவுக்கு கிடைக்கவில்லை.

 

திருமண உறவு, ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ரகசியப் பணவறை, காவல்துறையின் அலட்சியம், தேசிய ஊடகங்களின் மவுனம் போன்றவை இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது. சபியா உடலின் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான வன்முறைக்கு எந்த நியாயமும் கற்பிக்கமுடியாது. இந்தியாவின் மகளைக் கொடூரமாகக் கொலை செய்த உண்மையான குற்றவாளி யாராயினும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.