Skip to main content

எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு செபி ஒப்புதல்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

SEBI approves LIC's public offering

 

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஒப்புதல் வழங்கியுள்ளது. 

 

எல்.ஐ.சி.யின் பொதுப்பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் சுமார் 60,000 கோடி ரூபாய் நிதி திரட்ட போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொதுப்பங்கு வெளியீட்டுக்கான வரைவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம், அந்நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்தது. இந்த நிலையில், வரைவு அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்ட 22 நாட்களில் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, பங்குச்சந்தைகள் நிலையற்ற தன்மையில் காணப்பட்டதால், எல்.ஐ.சி. பொதுப்பங்கு வெளியீடு, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது செபி ஒப்புதல் அளித்துள்ளதால், அதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதானி குழும வழக்கு; ‘சிறப்பு புலனாய்வு குழு தேவையில்லை’ - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
 Supreme Court Verdict No need for Special Investigation Team on Adani Group case

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும் அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேலும் அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் எஃப்.பி.ஓ பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்தது. இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும், முதலீட்டாளர்களுக்கு விற்பனைத் தொகையைத் திரும்பச் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை  அமைத்தது. இந்த குழு, 173 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், "பங்குச் சந்தை ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளரான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தரவுகளின் அடிப்படையில் அதானி குழுமத்தின் எந்த ஒரு நிறுவனமும் பங்கு விலை அதிகரிப்பு போன்ற முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பங்குகள் விலை திடீரென அதிகரித்ததை மட்டும் வைத்துக்கொண்டு முறைகேடுகள் நடந்ததா என்ற முடிவுக்கு வருவது சாத்தியமில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு அதானி குழுமத்தில் 13 வெளிநாட்டு முதலீடுகள் குறித்து செபிக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி உள்ளது. ஆனால், இதில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படவில்லை. அதே சமயம் அதானி குழுமம் இந்திய ஒழுங்குமுறை சட்டங்களுக்கு இணங்குவதாகவும் செபி தெரிவித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பாக நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் அடிப்படையில் 3 மாதத்தில் செபி விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று (03-01-24) உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பில், ‘அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு அதிகாரம் உள்ளது. பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு தொடர்பான செபி விதிகளில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை. மேலும், ஒழுங்காற்று அமைப்புகளின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது. செபி நடத்தும் விசாரணையில் சந்தேகப்படுவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

நிபுணர் குழு அறிக்கையை ஆய்வு செய்து இந்திய முதலீட்டாளர்களின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் செபிக்கு அதிகாரம் உள்ளது. அதனால், ஹிண்டன்பர்க் அறிக்கையில் சட்டவிதி மீறல் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதனால், இது தொடர்பான வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.ஹிண்டன்பர்க் அறிக்கை அல்லது வேறு அறிக்கை அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிடவும் முடியாது. 22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்டது. மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் செபி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“அதானி குழுமத்தில் செய்த முதலீடு 77 ஆயிரம் கோடி அல்ல” - எல்ஐசி விளக்கம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

LIC explains about Adani Group investments

 

அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. இதில் எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது எல்ஐசி அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

 

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டிய தகவல்கள் அனைத்தும் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருந்தது.  

 

அந்த ஆய்வறிக்கையில், பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக்காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச்செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 4.20 லட்சம் கோடி இழப்பை சந்தித்தன. 

 

இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்திருந்தது என்றும், அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி 77 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது என்றும் அதானி குழுமப் பிரச்சனையால் எல்.ஐ.சி 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினைச் சந்தித்துள்ளது எனவும் கூறப்பட்டது. அதேபோல் எஸ்பிஐ, இந்தியன் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்து இருந்தன. இவையனைத்தும் மக்கள் பணம். இதனால் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரும் என பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

 

இந்நிலையில், இது குறித்து எல்.ஐ.சி விளக்கமளித்துள்ளது. அதில், அதானி குழுமத்தில் தாங்கள் முதலீடு செய்தது அனைத்தும் உரிய தரமதிப்பீடுகள் கொண்டவை. அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் 36 ஆயிரத்து 474 கோடி ரூபாய். ஜனவரி 27 ஆம் தேதி வரை அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 56 ஆயிரத்து 142 கோடி ரூபாய். எல்.ஐ.சி நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 41.66 லட்சம் கோடி. தவறான தகவல்களைப் பரவுவதால் முதலீட்டு விவரங்களைப் பகிர்கிறோம் என எல்.ஐ.சி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் எல்.ஐ.சி கூறியுள்ளது.