![schoolgirl in Gujarat scored 211 out of 200 in the exam](http://image.nakkheeran.in/cdn/farfuture/IdwJ4FHcbp68bGSIPaTraVxx8pyTmNWd86HFcWdEgHc/1715082834/sites/default/files/inline-images/Untitled-13_37.jpg)
குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் 200 மதிப்பெண்ணுக்கு 211 மதிப்பெண் பெற்றுள்ளது தொடர்பான மதிப்பெண் சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அம்மாணவி பயிலும் பள்ளியில் நேற்று மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது மாணவி மனிஷாபாய் வம்சிபிள் எழுதிய தேர்வுகளின் முடிவைப் பார்த்து அவரே ஆச்சர்யமடைந்தார்.
மாணவி மனிஷாபாய் வம்சிபிளின் மதிப்பெண் சான்றிதழில், தேர்வுகளில் அதிகபட்சமான 200 மதிப்பெண்களுக்கு குஜராத்தில்(மொழிப்பாடம்) 200க்கு 211 மதிப்பெண்களும் கணித பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண்களும் பெற்றதாக குறிப்பிபட்டிருந்தது. இந்த மதிப்பெண் சான்றிதழை மாணவி தனது பெற்றோரிடம் காண்பிக்க, அதிர்ச்சியடைந்த பெற்றோர், செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதோடு, பேசுபொருளாகவும் மாறியது.
இது குறித்து கல்விதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மதிப்பீட்டில் சிறு தவறு நடந்துள்ளதன் காரணமாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக விளக்கமளித்த பள்ளி நிர்வாகம், மாணவியின் தேர்வு முடிவுகளை மீண்டும் கணக்கிட்டு குஜராத்தி பாடத்தில் 200க்கு 191 மதிப்பெண்கள் என்றும், கணிதத்தில் 200க்கு 190 பதிப்பெண்கள் என்றும் சரியான சான்றிதழை வழங்கியது.