Skip to main content

“இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை” - அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி! 

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

"School and colleges are not open for now" - Minister Namachchivayam interview

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (02.08.2021) அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறைச் செயலாளர் அருண், இயக்குநர் மோகன்குமார், கல்வித்துறைச் செயலாளர் வல்லவன், இயக்குநர் ருத்ரகவுடு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. மேலும், உலக சுகாதார நிறுவனம் மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது என எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வகையான தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. 

 

இதுபோன்ற சூழலில் பள்ளிகளைத் திறப்பது சரியாக இருக்காது. கல்லூரிகளைப் பொறுத்தமட்டில் நிறைய மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அதேபோன்று ஊழியர்கள், பேராசிரியர்கள் 85 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இதுபோன்ற நிலையில் கல்லூரி திறப்பதில் சிக்கல் இருக்கிறது. மூன்றாம் அலையில் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணிக்க இயலவில்லை. எனவே பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கல்லூரிகளைத் திறப்பது குறித்து விரிவான ஆலோசனை செய்தோம். மூன்றாம் அலை எப்போது துவங்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது. தற்போது 3 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் மக்கள் தொகையில் முதல் டோஸ் தடுப்பூசி 1.65 லட்சம் பேருக்குப் போடப்பட்டிருக்கிறது. 

 

இரண்டாவது டோஸ் போட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஆக இருக்கிறது. எனவே இதனை அதிகப்படுத்த கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் இணைந்து சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  11, 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பள்ளி, கல்லூரிகள் எப்போது துவங்கலாம் என முதல்வர், கவர்னரை ஆலோசித்துவிட்டு அடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு திறக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. தற்போது பள்ளி, கல்லூரி திறப்பு இல்லை.

 

பள்ளிகள் 75% கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இதனை மீறும் தனியார் பள்ளிகள் மீது புகார் கொடுத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அறிவித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படும். கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வாங்க வேண்டும். அரசின் உத்தரவை மீறும் பள்ளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கல்விக் கட்டண கண்காணிப்புக் குழு விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக டோல்ஃப்ரீ எண் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.