Skip to main content

காங்கிரஸ் கட்சியில் புதிய குழப்பம்... கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்...

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ராகுல் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பல முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர்.

 

satyajith deshmuk may quit congress party

 

 

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சத்யஜித் தேஷ்முக், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸில் இருந்து நேற்று ஊர்மிளா விலகிய நிலையில் இன்று சத்யஜித் தேஷ்முக் குறித்த செய்தி அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது விலகல் குறித்து சத்யஜித் ஏன்ஐயிடம் அளித்த பேட்டியில் கூறுகையில், ''நான் இப்போதைக்கு பாஜகவில் இணையப் போவதில்லை. ஆனால் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பேன். நான் காங்கிரஸிலிருந்து விலகுவதற்கான முக்கியமான காரணம், அங்கு ஏற்பட்டுள்ள அதிருப்திதான். காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு எனது ஆதரவாளர்களுக்காக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எதுவும் சாதிக்க முடியவில்லை. அதனால் அதற்கு ஏற்ற இடத்தைத் தேடி நான் செல்ல வேண்டியுள்ளது. காங்கிரஸில் இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை" என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய நபர்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது.