Skip to main content

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ - ஒரு வருடமாக இளைஞரை துரத்தும் வினோதப் பறவை 

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 sarus crane follows its rescuer for a year

 

தன்னை காப்பாற்றியவரை ஒரு வருடமாக பின்தொடரும் ஸாரஸ் கேன் பறவையின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்துக்கு அருகே உள்ளது அவுரங்காபாத் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஆரிஃப். 30 வயதான இவர், மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். தனக்கு அழைப்பு வரும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் முஹம்மது ஆரிஃப். இவர் தன்னுடைய பைக்கில் நாள்தோறும் 40, 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் கௌரிகஞ்ச் பகுதியில் அவர் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வயல் வெளியில் ஸாரஸ் கேன் வகையைச் சார்ந்த பறவை ஒன்று அடிபட்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்த ஆரிஃப், அந்தப் பறவையை விட்டுச் செல்ல மனமில்லாமல் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

 

அதன்பிறகு, பறவையின் உடைந்த கால்களுக்கு மருந்து போட்டுவிட்டு மூங்கில் குச்சிகளைக் கொண்டு காலில் கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பறவை குணமாவதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதால் அதற்காகவே தனியாக கூரையில் ஷெட் அமைத்து அதில் அந்தப் பறவையை பாதுகாத்து வந்துள்ளார். அதன்பிறகு, ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்த பிறகு முஹம்மது ஆரிஃப் எங்கு சென்றாலும் பின்னாலேயே வந்துவிடும். மேலும், அவரைத் தவிர வேறு யாராவது உணவு கொடுத்தால் அவர்களை தாக்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்ததால் அதைக் கொண்டுபோய் காட்டுக்குள் விட்டுள்ளார். ஆனால், காட்டுக்குள் செல்வதை விரும்பாத அந்தப் பறவை, ஆரிஃப் பைக்கிற்கு பின்னாலேயே அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஒரு நிமிடம் கூட ஆரிஃப்பை விட்டுப் பிரியாமல் எப்போதும் அவரையே சுற்றி வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.