saran singh who left the alliance with India after Bharat Ratna award to his grandfather

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9 ஆவது பிரதமராகப் பதவி வகித்தவர் ஆவார். சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழி நடத்தியது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆவார். இவர் சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கும், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில், சரண் சிங்கின் பேரனும்ஆர்.எல்.டி கட்சித் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முந்தைய அரசுகளால் இன்றுவரை செய்ய முடியாததை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நிறைவேற்றி உள்ளார். எளிய மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் எனக்கு மிகப்பெரிய நாள்; மிகவும் உணர்ச்சிகரமான நாள். குடியரசு தலைவர், மத்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து, ‘நீங்கள் பாஜகவுடன் கூட்டணிஅமைக்க உள்ளீர்களா’ என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “கூட்டணி வாய்ப்பை என்னால் எவ்வாறு மறுக்க முடியும்?அதே நேரத்தில் தொகுதிகள் குறித்தோ, வாக்குகள் குறித்தோ பேசுவதற்கான நாள் அல்ல இது. மக்களின் உணர்வுகளையும் நாட்டின் இயல்பையும் பிரதமர் மோடி உணர்ந்து இருக்கிறார் என்பதை அவர் தனது இந்த முடிவின் மூலம் உணர்ந்திருக்கிறார்” என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

Advertisment

உத்தரப் பிரதேசத்தில்,இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளமும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து மக்களவைத்தேர்தலில்போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உத்தரப் பிரதேச அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.